 |
திருக்குறள் முதல் நூல் அல்ல
திருக்குறளாசிரியர் பாரத நாட்டின் மிகத்தொன்மை வாய்ந்த அறநெறிகளை
மறுமலர்ச்சியுறச் செய்தவரேயன்றி திருக்குறளை அவர் முதல் நூலாகக்
கூறவில்லை.
திருக்குறளாசிரியர் "பகுத்துண்டு பல்லுயிரோம் புதல் நூலோர்
தொகுத்தவற்றுளெல்லாம் தலை" எனக் குறிப்பிடுங் குறளின் வாயிலாகத் தாம்
மேற்கொண்டுள்ள கொள்கைகள் யாவும் தமக்கு முன்னர் விளங்கிய நூல்களே
என்பதை ஒளிவு மறைவின்றி வெளிப்படுத்தியுள்ளார். அவ்வாறாயின் முதல்
நூல் எது என்பதை ஆராய்வோம்.
முதல் நூல்
"வினையின் நீங்கி விளங்கிய அறிவின் முனைவன்
கண்டது முதல் நூல்"
எனும் தொல்காப்பியப் பாயிரத்தால் முதல் நூலையும், முதல் நூல் உரைத்த
முனிவரையும் காண்கிறோம். முனிவர் எனில் முற்றுந்துறந்து
ஐம்புலன்களையும் வென்றுயர்ந்தோரேயாவர். இம் முனிபுங்கவர்களின் தவ
மாண்பினை நீத்தார் பெருமையில் படம் பிடித்துக் காட்டியுள்ளார்
திருக்குறளாசிரியர்.
திருக்குறள் காட்டும் முதல் நூலின் தவக்கோலம்.
"இயல்பாகும் நோன்பிற் கொன்றின்மை
உடைமை மயலாகும் மற்றும் பெயர்த்து"
"மற்றுந்தொடர்பாடெவன்கொல் பிறப்பறுக்க
றுற்றார்க்கு உடம்பும்மிகை"
என்ற பற்றற்ற நிலையையுடைய தவத்தை முதன்முதல் மேற்கொண்டு துறவறத்துக்கு
வழிகாட்டியவர் நாம் முதலில் கூறியபகவான் விருஷப தேவரேயாவர். இம் முதல்
முனிவரே இருவினைகளையும் வென்று வானோர்க்கும் உயர்ந்த உலகமாகிய
வீடுபேற்றை அடைந்தவர்.
வினையின் நீங்கி விளங்கிய பேரறிவனாம் பகவான் விருஷப தேவா�ன்
திருமொழியை முதல் நூலாகும். இவ்வரலாற்றுண்மையை முன் வைத்தே "நூலோர்
தொகுத்தவற்று எல்லாம் தலை" எனும் பொன் மொழியால் ஒளி வீசச்
செய்துள்ளார் திருக்குறளாசிரியர் இம் மாண்புடை முதல் நூலோரைப்
போற்றும் நீலகேசி ஆசிரியர்.
"நல்லார் வணங்கப்படுவான் பிறப்பாதி நான்கும்
இல்லான் உயிர்கட்கு இடர் தீர்த்து உயா�ன்பமாக்கும்
சொல்லான் தருமச்சுடரான் எனுந்தொன்மையினால்
எல்லாம் உணர்ந்தான் அவனே இறையாக ஏத்தி"
எனவும்
சொற்றியாவதுங் கேளாய் சுதநயம் துணிவுமல் குரைத்தி
கற்றியாவதும் இலையாய்க் கடையில்
பல்பொருளுணர் உடையை
பற்றியாவதும் இலையாய்ப் பரந்த வெண்
செல்வமும் உடையை
முற்றயார்நினை உணர்வோர் முனைவர் தம்
முனைவர்க்கும் முனைவா"
எனவும் போற்றி மன்னுயிர்க்கெல்லாம் அரண் செய்யும் அறநெறியை உரைத்த
முதல் இறைவன் முதல் முனைவன் என்பதைக் கலங்கரை விளக்கம் போல்
காட்டியுள்ளார்.
அறிவுரைகளும் தத்துவக்கலைகளும்
நாம் மேலே கண்ட முதல் நூல் உரைத்த முனிவராகிய பகவான் விருஷப தேவர்,
அஹிம்சையின் அடிப்படையில் இல்லறம், துறவறம் ஆகிய இரு அடிப்படையில்
இல்லறம், துறவறம் ஆகிய இரு பேரறங்களோடு அரசியல், பொருளாதார சமத்துவம்,
பகுத்துண்டு வாழ்தல், உலகம், உயிர், உயிரில்லாதவை, இறப்பு: மறுபிறப்பு,
பாவம், புண்ணியம், ஊழ்வினை வானுலகம், வானோர்க்குமுயர்ந்த வீட்டுலகம்
போன்ற பல தத்துவங்களையும் உலகுக்கு அருளினார்.
இப்பேரறங்களை தம் பெயரால் அமைக்காமல் மக்கள் பொது நெறிகளாக வேண்டி
அறம், அறம் என்றே பெயா�ட்டு வழங்கினார். அப்பெருமகனாருக்குப் பின்
அவ்வப்போது இருபத்து மூவர் தோன்றி அவ் அறநெறிகளைப் பரப்பினர். அவர்கள்
வழிவந்த அறவோர்கள் பலரும் இயற்றியருளிய நூல்களிலும் இலக்கியங்களிலும்
அறம் என்ற பெயராலேயே அம் முதல்வா�ன் கொள்கைகளைப் படைத்துவந்தனர்.
சமயம் என்ற பெயரையே அந் நூல்களில் காணவியலாது.
பகவான் விருஷப தேவர் அருளிய முதல் நூல் வழி வந்த நூல்கள் யாவற்றிலும்
பிறர் நம்பும் காணவியலாத கடவுளைப் பற்றியோ படைப்பைப் பற்றியோ
கூறப்படவில்லை. இவ்வுலகம் ஆதியும் அந்தமுமற்றதென்றும், இவ்வுலகமும்,
உலகில் காணும் உயிர்களும் எவராலும் படைக்கப்பட்ட தல்லவெனும்
கொள்கையையும் அடிப்படையாகக் கொண்டவை அதனாற்றான் பகவான் விருஷபதேவர்
மக்கள் வாழ்க்கைப் பண்பிற்கும் ஆன்மீக வளர்ச்சிக்கும் உரிய அற நெறிகளை
வகுத்து அவைகளின் வழி ஒழுகி, உயர்நிலையை எய்த வேண்டும் என்ற உண்மையை
வலியுறுத்தியுள்ளார். இதனால் மக்கள் பலரும் அறநெறிகளைக் கடைபிடிக்க
வேண்டும் என்பது தெளிவாகிறது. தன்னை இறைவனாச் செய்வானும் தானே,
தன்னைச் சிறுவனாச் செய்வானும் தானேயாகையால் அவரவர் உயர்வுக்கும்,
தாழ்வுக்கும் அவரவர் செயல்களேயன்றி வேறெந்தச் சக்தியும் அல்ல
என்பதாகும். அதாவது எல்லாம் ஆண்டவன் செயல் என்ற கொள்கை ஜைனத்திற்கு
உடன்பாடல்ல. இவ் அறிவியல் தத்துவத்தை மேற்கொண்ட திருக்குறளாசிரியர்,
"இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகியற்றியான்"
எனும் குறட்பாவின் வாயிலாக ஏற்றத் தாழ்வுடன் கூடிய இவ்வுலகைப் படைத்த
இறைவன் ஒருவன் இருப்பானாயின் அவன் விரைவில் அழிக என வன்மையாகச்
சபிக்கின்றார். இதனால் இவ்வுலகைப் படைத்துக் காத்து அழிக்கும் கடவுளே
இல்லையெனும் கொள்கையைத் திருவள்ளுவர் நிலைநாட்டியுள்ளதை அறிகின்றோம்.
அது மட்டுமல்ல, மனிதன் தன் சுய முயற்சியாலும் ஒழுக்கத்தாலும்
தவநெறியாலுமே இன்ப துன்பங்களை அடைகின்றான் எனும் உண்மையையும், அவன்
ஐம்புலன்களையும் வென்று வீடு பேற்றை அடையும் ஆற்றலும் படைத்தவன்
என்பதையும் வலியுறுத்திக்கூறும் முதல் அறவோரின் வழிநின்று
திருக்குறளாசிரியர்.
"ஆராவியற்கை அவா நீங்கின் அந்நிலையே
பேரா இயற்கை தரும்."
என்னும் குறளால் ஐந்தவித்துயர்ந்தோர் அடையும் இனிப் பிறவா நிலையையும்,
"வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப்படும்"
என்னும் குறளால் இல்லற நெறி வழுவா இல்லறத்தோர் உறும் தேவருலகையும்,
"யான் எனது என்னும் செறுக்கறுப் பான்
வானோர்க் குயர்ந்த உலகம் புகும்."
என்னும் குறலால் தவ மாண்புடையோர் வினைகளை வென்று அடையும் வானோர்க்கும்
உயர்ந்த வீட்டுலகையும் கூறி மனிதனின் ஆற்றலை வெளிப்படுத்தியுள்ளார்.
இக் குறட்பாக்களால், கடவுளின்செயலுக்கே இடமின்மையை அறிகின்றோம்.
திருவள்ளுவர் மேற்கொண்டவை பகவான் விருஷப தேவர் கொள்கைகளே
திருக்குறளாக மலர்ந்து அறிவியல் மணம் வீசுகிறது என்பதை அறிந்தோம்.